Friday, August 25, 2023

வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று வயது 384 - டாக்டர் எச்.கார்த்திபன்

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (தோற்றுவித்த ஆண்டு 1914), வடசென்னை, வியாசர்பாடி- வரலாறு.

தமிழகத்தில் உள்ள மடங்களை பொதுவாக இரண்டு பெரும் பிரிவாக பிரிக்கலாம். ஒன்று, பிராமண மடங்கள். இரண்டாவது பிராமணரல்லாத மடங்கள்.

பிராமணர் அல்லாதவர்கள் வேதங்களை ஓதக் கூடாது என்றும், சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளில் அவற்றை வழங்கக் கூடாதென்றும் கடும் கட்டுப்பாடுகள் அந்தக் காலத்தில் இருந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி மடம், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமி மடம், பெரம்பூர் வீர சுப்பையா சுவாமி மடம், வண்ணை நாராயண தேசிகர் மடம் போன்ற பிராமணர் அல்லாத மடங்கள் தமிழ் குருகுல மரபு முறையில் செயல்பட்டு, பல்வேறு மொழிகளில் வெளியாகிய வேதாந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டுவந்துள்ளார்கள்.

பிச்சை பாத்திரம் ஏந்தி மிக எளிமையாக வாழ்ந்த துறவிகளால் இந்த மடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் வரலாறு.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்) என்பது வடசென்னையில் உள்ள, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள மடாலயம் ஆகும்.

இம்மடாலயத்திலுள்ள கல்வெட்டில் "ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் கலியுகாதி 5019-ஆம் ஆண்டு பிங்கள வருடம் பங்குனி மாதம் 22-ம் நாள் (4-4-1918) குருவாரம் உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்களின் சமாதி கர்பக்கிரகத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது" என்றும் "ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் கலியுகாதி 5060-ஆம் ஆண்டு விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 8-ஆம் தேதி (24-10-1958) வெள்ளிக்கிழமை உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்கள் சமாதி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன்மீது பலீபீடம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம்.

சித்தர்களில் ஒருவராக அறியப்படும் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை இங்கு அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.

ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு

திருப்போரூரில் முத்துசாமி பக்தர்- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். இவர் சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தினார்.

இந்த நேரத்தில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தனர். சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சிறுவயதிலேயே தனிமையை நாடினார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார். ஒரு முறை அவர் சமாதி நிலையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிவப்பிரகாசம் இறந்து விட்டதாகக் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சமாதி நிலையில் இருந்து மீண்ட போதுதான் அனைவருக்கும் உண்மை புரிந்தது.

இவருக்கு 16-ஆவது வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த இல்லற வாழ்விலிருந்து விடுபட நினைத்த அவர், திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதிக்குச் சென்று துறவு கோலம் பூண்டார். அவரை குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீடு வரை வந்தவர், வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.

தாயார் கொண்டு வந்து கொடுத்த உணவை கரத்தில் பெற்று உண்டார். மூன்று உருண்டை உணவைப் பெற்றுச் சாப்பிட்டவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அவர் துன்பங்கள் சூழ்ந்திருந்த இல்லத்திற்குச் சென்று, ஒரு கவளம் உணவை கரத்தில் வாங்கி உண்பார். அதன் மூலம் அந்த இல்லங்கள் சுபீட்சமான வாழ்வை அடைந்தன. கரத்தையே பாத்திரமாக ஆக்கி உணவை வாங்கி அருந்திய காரணத்தால் ‘கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.

திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவவாழ்க்கையைப் பல இடங்களில் கழித்து வந்த அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். இதையறிந்த ஒரு தொண்டா், வியாசர்பாடியில் ஓர் இடத்தை வாங்க உதவி செய்தார். அங்கு சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ அமைத்தார். அது ‘சாமியார் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.

தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலிலிருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உருவானது.

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம்’, ‘தத்துவாத சந்தானம்’ என்ற அத்வைத நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளார்.

#Chennai_384 #Chennai_day #Madras_Day#Madrasday2023#MadrasDay #celebrate_chennai_day#ChennaiDay#chennai#singarachennai #nammachennai#சென்னை தினம்#சென்னை தின வாழ்த்துகள் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்i#வடசென்னை#வியாசர்பாடி#வேதாந்த நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு#பிராமணரல்லாத மடங்கள்.

















No comments:

Post a Comment