Friday, January 24, 2014

கங்கை ஜாடியின் கதை!

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர். 

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார். சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றினால் அழுத்தமாகக் கட்டியிருந்தார்; அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார். 

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள் பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. 

No comments:

Post a Comment